முஸ்லிம்களையும் நபிகள் நாயகத்தையும் வம்பிக்கிழுத்த பொய் பகுத்தறிவுவாதிகளின் "உண்மை" எனும் ஏட்டுக்கு உணர்வு இதழ் விடுத்துக்கொண்டிருக்கும் அறைகூவின் தொகுப்பு!


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 14

பெரியார் அவர்கள் சீர்திருத்தக் கருத்துக்கள் சிலவற்றைக் கூறினாலும் முழு ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் முழு விபரங்களுடனும் அணுகாத காரணத்தால் அவரிடம் ஏராளமான முரண்பாடுகள் காணப்படுகின்றன.

இதற்கு மற்றொரு உதாரணமாக கிறிஸ்தவ மதம் குறித்து அவர் கூறியதையும் சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

கடவுள் என்றால் மூடநம்பிக்கைக்கு ஆளாகக் கூடாது, ஜாதி கடவுள், அரசமரம், வில்வமரம், கல், படம், பொம்மை எல்லாம் நம் கடவுள்கள் என்றால் என்ன நியாயம்? ஆறறிவுள்ள மனிதனா இவ்வளவு காட்டுமிராண்டியாயிருப்பது? கடவுள் வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளுங்களேன். அந்த கடவுளுக்கு உருவம் கிடையாது. எங்கும் இருப்பார். பேர் இல்லாதவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். முகமதியரும் கிருஸ்தவர்களும் அப்படித்தானே வைத்திருக்கிறார்கள்? ஒரு கடவுள் என்றுதானே எல்லோரும் பேசியிருக்கிறார்கள். (-விடுதலை- 14.7.1957)

மேல்நாட்டவன் தோற்றுவித்த தங்கள் காட்டுமிராண்டிக் கடவுள்களையும், மதத்தையும், சாஸ்திரங்களையும் இப்போது ஒழித்துவிட்டு புதிதாகக் கடவுளையும், மதத்தையும் உண்டாக்கிக் கொண்டான். அதுதான் கிருஸ்தவன் கூறும் கடவுள், கிருஸ்தவ மதம், அவனது ஒரே கடவள், அது பிறப்பு இறப்பு இல்லாதது, அருளானது, அன்பானது என்று ஆக்கிக்கொண்டான். அதன் காரணமாக அறிவு பெற்றான். தாராளமாக தன் அறிவைச் செலுத்தி முன்னேறுகின்றான். (விடுதலை 30.10.1960)

கிறிஸ்தவ மார்க்கத்தில் சாதி இல்லை, ஒரே கடவுள் கொள்கை உள்ளது, கிறிஸ்தவ மார்க்கத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை என்றெல்லாம் கூறிய பெரியார் அவர்கள் தமக்குத் தாமே முரண்பட்டு கிறிஸ்தவ மார்க்கத்தில் சாதி உண்டு என்று கூறியதை உணர்வு 13:08 இதழில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

மேலும் கிறிஸ்தவ மதம் பற்றியும், இந்து மதத்தில் புரோகிதர்கள் மக்களை ஏமாற்றுவது போலவே கிறிஸ்தவ மதத்திலும் புரோகிதர்கள் மக்களை ஏமாற்றுவதாக பெரியார் முரண்பட்டுக் கூறுவதையும் நாம் பார்க்கலாம்.

நம் நாட்டு இந்து ஜனங்களுக்கு பாதிரிமார்களென்றால் ஒரு வித பக்தியும் மரியாதையும் அவர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் இரகசியத்தை நமது மக்கள் உணரவே முடியாமல் போய்விடுகிறது. பொதுவாக பாதிரிமார்கள் என்போர் ஆங்கில அரசாங்கத்திற்கு ஒரு நடுத்தூண் போன்றவர்கள். சுருக்கமாய் ஒரு வார்த்தையில் சொல்லுவதானால் அரசாங்கத்திற்கும் இந்திய குடிமக்களுக்கும் இடையில் உள்ள ஒற்றர்கள் என்றுதான் அவர்களைச் சொல்லவேண்டும்.

அப்பாதிரிமார்களிலேயும் உண்மையாய் கிருஸ்து நாதருடைய கட்டளைப்படி நடக்கக் கூடியவர்களோ, நடக்க வேண்டும் என்ற ஆசையுள்ளவர்களோ சிலர் இருக்கலாம். நாம் நமது கண்ணுக்குத் தென்பட்ட அளவுக்கு பெரும்பான்மையானவர்களைப் பற்றி நமது அபிப்பிராயத்தை எழுதுவோம்.

ஒரு தேசத்தையோ ஒரு மதத்தையோ ஜெயித்துக் கைப்பற்ற வேண்டுமானால், எப்படி திருடன் ஒரு வீட்டில் திருடுவதானால் கன்னம் வைத்து துவாரம் செய்துகொண்டு முதலில் தன் காலைவிட்டு பார்ப்பானோ அதுபோல் பாதிரிமார்களை அதாவது மத குருக்கள் என்பவர்களை முதலில் அனுப்புவது என்பது ஒரு வித தந்திரம்.

உதாரணமாக, நமது நாட்டில் பிராமணர்கள் எப்படி தங்கள் மதத்தை காக்க - பரப்ப – தங்களுக்குள்ளாகவே ஒருவரை லோககுரு என்றும், ஆச்சாரியார் என்றும், மடாதிபதிகள் என்றும், மகந்துகள் என்றும் சொல்லிக்கொண்டு அவர்களுக்கு மற்றவர்கள் பார்த்து பயந்து பக்திகொள்ளும் வண்ணம் அணிவிடை பணிவிடைகள் செய்வதும் கை, வாய் பொத்தி பேசுவதும், சுவாமிகள் சுவாமிகள் என்று கூப்பிடுவதும், அடியேன் அடியேன் என்று சொல்லிக் கொள்வதுமான தந்திரங்களை செய்து தங்கள் மதப் பிரச்சாரம் செய்து (மதப் பிரச்சாரம் என்பது பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்றும், தன்னைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் படும்படியான மனப்பான்மையை உண்டாக்கி விடுவது) தங்கள் உயர் வாழ்க்கையை நிலை நிறுத்த ஆக்கந்தேடிக் கொள்ளுகிறார்களோ, அதுபோல் ஐரோப்பியர்களும் தங்களுக்குள் ஒருவரை மதகுரு என்பதாக பேர் வைத்து நமது நாட்டுக்கு அனுப்புவதும், அவர் நமது நாட்டின் இரகசியங்களையும், இங்குள்ள ஜனங்களின் யோக்கியதைகளையும் அறிய மதப் பிரச்சாரம் செய்வதுபோல் ஏழை மக்களிடையும் பாமர மக்களிடையும் இடம், பொருள், ஏவல் என்கிற சௌகரியங்களால் திரிந்து பழகி அவர்களை தங்கள் மதத்திலும் சேர்த்துக் கொண்டு தங்கள் சுவாதீனமும் செய்துகொண்டு நம் நாட்டு இரகசியங்களை அறிந்து, பிறகு நாட்டையே சுவாதீனப்படுத்திக் கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் செய்வதுமாயிருக்கிறது.

இந்தப் பாதிரிகள் பெரும்பாலும் நமது குருக்களைப் போலவே பார்வைக்கு கண்ணை மூடிக்கொண்டு ஜபம் செய்பவர்களாயிருந்தாலும், அந்தரங்கத்தில் இவர்களும் அவர்களைப்போலவே பெரிய ராஜ தந்திரிகளாய்தான் இருப்பார்கள்.

(ராஜதந்திரம் என்றால்தன் தெரியுமே! அதாவது பொய் சொல்லலாம், உள் ஒன்று வைத்து புறம்பொன்று பேசலாம், மோசம் செய்யலாம், நம்பிக்கை துரோகம் செய்யலாம், அதாவது ஒரு காரியத்தை சாதிக்க வேண்டுமானால் எதையும் இன்னும் என்னென்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால் இதற்கு ஒரு விலக்குண்டு. அதாவது இவ்வளவும் தனது சுய நலத்திற்காக செய்யக் கூடாது. பொது நன்மைக்காக என்று செய்யலாம் என்றும் இதற்காதாரமாகவும் தாராளமாகவும் 'பொய்மையையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில்' என்கிற குறளையும் சொல்லிவிடுவார்கள்.

இதை நமது லோகமான்யர்களில் அநேகர் ஒப்புக்கொண்டாலும் நமது ராஜீயவாதிகளில் 100க்கு 99தே முக்கால் பேர் ஒப்புக் கொண்டாலும் - காரியத்தில் செய்து வந்தாலும் மகாத்மா காந்தியடிகள் மாத்திரம் இதை கண்டிப்பாய் ஒப்புக் கொள்வது இல்லை. இம்மாதிரி ராஜதநதிரத்தில் அவருக்கு நம்பிக்கையுமில்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால் தாட்சண்யத்தாலும், வாத்சல்யத்தாலும், கருணையினாலும் சில சமயங்களில் ஏமாந்து போய்விடுகிறார் என்று பலர் சந்தேகப்பட சொல்லிக் கொள்ளக் கூடும். (ஆனால் அவரது சிஷ்யர்கள் வெகு பேருக்கு ராஜ தந்திரத்தில் நம்பிக்கையுண்டு).

ஒவ்வொரு ஊரிலும் பிராமணர்கள் எப்படி கட்சி, பிரதிக் கட்சி உண்டாக்கி ஆளைத் தூக்கி ஆள் மேல் போட்டு ஒரு கட்சியில் தாங்கள் சேர்ந்துக் கொணடு பீசில்லாமல் பேசுவதும், விலையில்லாமல் கூட தீர்ப்புக் கொடுப்பதுமாயிருக்கிறார்களோ, அதுபோலவே ஆங்காங்கு உள்ள பாதிரிமார்களும், தங்களுக்கு அனுகூலமாக ஒரு கட்சியில் சேர்ந்துக் கொள்ளுவதும் வழியில்லா வழியில் அவர்களது அக்கிரமங்களுக்கு அனுகூலம் செய்வதுமான காரியங்களால் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள்.

ராஜீய விஷயங்களிலும் யார் பேரைச் சொன்னால் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தை வைத்துக்கொண்டு நமது பிராமணர்களில் பலர் இரவும் பகலும் உள்ளத்தில் மகாத்மாவைத் திட்டிக் கொண்டிருந்தாலும் அவர்கள் கொள்கைகளை அழிக்க பிரயத்தனப்பட்டாலும் வெளியில் அவர் பேரைச் சொல்லிக் கொண்டு தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ளுகிறார்கள்.

அதுபோலவே ஒத்துழையாமைத் தத்துவத்திற்கு யோக்கியதை இருக்கிற காலத்தில் மனதில் ஒத்துழைத்து பதவியும் பணமும் சம்பாதிக்க ஆசை இருந்தாலும் ஒத்துழையாமையின் பெயரைச் செல்லிக்கொண்டு எப்படி தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்களோ, அதுபோலவே இப்பாதிரிமார்களும் மகாத்மாவின் கொள்கை உண்மையில் தங்கள் உத்தேசத்திற்கு விரோதமாயிருந்தாலும் மகாத்மா பெயரைச் சொல்லிக் கொண்டு தங்கள் காரியத்திற்கு ஆக்கம் தேடுவதும் சுயராஜ்யக் கட்சியில் உள்ள புரட்டுகளும் பித்தலாட்டங்களும் அதை நடத்துவோரின் நாணயக் குறைவுகளும் தங்களுக்கு நன்றாய் தெரிந்திருந்தாலும் இக்கட்சிக்கு யோக்கியதை ஏற்பட்டால் தங்கள் காரியங்களை தாராளமாய் நடத்தலாம் என்றும், இக்கட்சியின் பலனால் தங்கள் நாட்டுக்கும் தங்கள் கவர்மெண்டுக்கும் நிம்மதி ஏற்பட்டு தாராளமாய் தங்கள் காரியம் நடந்தேறுமென்பதையும் மனதில் வைத்துக் கொண்டு அக்கட்சியையும் கட்சியாளர்களையும் பாராட்டுவதும் அனுபோகத்தில் பார்த்து வருகிறோம்.

அப்படிக்கில்லாமல் இருந்தால் அகிம்சை, சத்தியம் முதலியது கொண்ட ஒத்துழையாமையைப் பற்றி குற்;றம் சொல்லி இந்தியர்களுக்கு புத்தியில்லை என்று சொன்ன பாதிரிகளின் புரட்டும் மோசமும் கொண்ட சுயராஜ்யக் கட்சி ஏற்பட்ட பிறகு இப்போதுதான் இந்தியர்களுக்கு புத்தி வந்திருக்கிறது என்று சொல்லுவார்களா? ஆதரிப்பார்களா? என்பதை நுட்பமாகக் கவனிப்பவர்களுக்குத் தெரியாமற்போகாது.

இந்தியர்களுக்கு சுவாமியார், குரு, சன்யாசி, துறவி என்கிற பதங்கள் மிகுதியும் மரியதையும் செய்யத் தக்கதாகி விட்டதால், நம்மை ஏய்க்க வேண்டியவர்கள் இந்த வேஷத்தைப் போட்டுக்கொண்டு நம்மை ஏய்த்துத் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளுகின்றார்கள். அப்படியில்லாமலிருக்கும் பட்சத்தில் நம்மை ஏமாற்றி நம்மை இழிவுபடுத்தி நமது இரத்தத்தை உறிஞ்ச வந்த பாதிரிமார்களுக்கும், சங்கராச்சாரியார்களுக்கும், லோக குருக்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மகந்துக்களுக்கும் நாம் இவ்வளவு குருட்டு பக்தி வைப்போமா? (-குடியரசு- 07.03.1926)

பாதிரிகளும் இந்துமதக் குருக்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று அழுத்தம் திருத்தமாகக்கூறி அவாகளைப் பெரியர் இனம் காட்டியுள்ளார். 1926லேயே அவர்களைப்பற்றி நன்கு அறிந்திருந்த பெரியார் பின்னர் கிறிஸ்தவார்களுக்கு நற்சான்று அளித்ததில் எந்த பகுத்தறிவும் இல்லை.

மேலும் கிறிஸ்தவ மார்க்கத்தில் 'ஒரு கடவுள் கொள்கை' உண்டு என்று கூறிய பெரியார் அவர்கள் அவ்வாறு இல்லை என்பதை இன்னொரு சமயத்தில் மாற்றிக் கூறுவதையும் காண்கிறோம்.

இதுபோல்தான் மற்ற கிறிஸ்து இஸ்லாம் (முஹமது) முதலிய மதங்களுமாகும்.

கிறிஸ்துவ மதத் தலைவர் ஏசு கிறிஸ்து என்பவர் 2000- ஆண்டுகளுக்கு மன் தகப்பனில்லாமல் பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம். ஆகவே அவர் கடவுளுக்கு மகனாம் (தேவ குமாரனாம்) ஆகவே அவர் (சிலுவையில் அறையப்பட்டு) கொல்லப்பட்டாராம். செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம். பல அற்புதங்களைச் செய்தாராம். இவற்றையெல்லாம் நம்பினால்தான் கிருஸ்தவ மதம் இருக்க முடியும்.

அறிவைக் கொண்டு பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்கு குமாரன் எதற்கு?

கடவுள் ஒருவனை மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்?

கடவுள் தோன்றி எத்தனையோ காலம் ஆன பிறகு அப்போது (2000 வருடங்களுக்கு முன்) மாத்திரம் எதற்காக மகனை உருவாக்கினார்?

அதற்கு முந்தின காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை? அப்போதெல்லாம் செத்தவர்கள் இல்லையா?

குருடர்கள் இல்லையா?

பசித்தவர்கள் இல்லையா?

அந்த (கி. பி. 1 ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது? கடவுள் செய்ய வேண்டியதை சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்லவேண்டும்? அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்லவேண்டும்? அந்த காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை?

இன்று ஏன் அவர் வரவில்லை? இப்போது கிறிஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள்? தேவ குமாரனுக்கு இவ்வளவுதான் சக்தியா? இதுபோலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகின்றது? ('உண்மை' இதழில் பெரியார் எழுதிய தலைங்கம். பெரியார் களஞ்சியம் - தொகுதி 2 பக்கம் 57 : 62 14.06.1971)

குருடர் பார்க்கிறார், செவிடர் கேட்கிறார் என்றெல்லாம் பாமர மக்களை ஏமாற்றி ஆசை வார்த்தை காட்டி திருச்சபைகள் மத மாற்றம் செய்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். மேலும் இயேசு மேரி ஆகியோரின் சிலைகளை அவர்கள் வழிபடுவதையும் நாம் கண்டு வருகிறோம். எனவே பெரியாரின் இந்த விமர்சனங்கள் சரியானதுதான்.

ஆனால் கிறிஸ்தவ மார்க்கத்தில் ஒரே கடவுள் கொள்கை உண்டு. உருவச் சிலை இல்லை. சாதி இல்லை என்றெல்லாம் பெரியார் கூறியது பகுத்தறிவு பூர்வமானதாக தெரியவில்லை.

இதுபோல் முரண்பட்டு பெரியார் பேசியவை இன்னும் உண்டு - இன்ஷா அல்லாஹ்

Blog Archive