முஸ்லிம்களையும் நபிகள் நாயகத்தையும் வம்பிக்கிழுத்த பொய் பகுத்தறிவுவாதிகளின் "உண்மை" எனும் ஏட்டுக்கு உணர்வு இதழ் விடுத்துக்கொண்டிருக்கும் அறைகூவின் தொகுப்பு!


போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல். உண்மை ஏட்டுக்கு பதிலடி பாகம் - 18

போலி பகுத்தறிவுவாதிகளின் மற்றொரு மூடநம்பிக்கையானது உருவப்பட திறப்புகளும், அதற்கான விழாக்களுமாகும்.

உருவப்படங்களும் சிலைகளும்

உலகத்தில் சீர்திருத்தக் கருத்துக்களைக் கூறியவர்களை சீர்திருத்தக் கருத்துக்களைக் கூறியதாக கருதப்பட்டவர்களை மதிக்கிறோம் என்ற பெயரில் உருவப்படங்களும், சிலைகளும் உருவாக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவர்கள் அவதாரங்கள் எனவும், தெய்வங்கள் எனவும் கருதப்படும் நிலையும் ஏற்பட்டது.

எந்த மதத்தவரும் தமது வழிகாட்டிகளை மதிப்பதைவிட நபிகள் நாயகத்தை முஸ்லிம்கள் அதிகம் மதிக்கின்றார்கள். நபிகள் நாயகம் அளவுக்கு மதிக்கப்படும் தலைவர் உலகில் இல்லை எனலாம். எவ்வளவுதான் நபிகள் நாயகத்தை முஸ்லிம்கள் மதித்தாலும் அவர்களைக் கடவுள் என்று முஸ்லிம்கள் கருதுவதில்லை. நபிகள் நாயகத்தை வழிபடுவதும் இல்லை.

ஆனால் மற்ற அனைவரும் கடவுள் அந்தஸ்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான காரணங்களில் முதன்மையானது மற்றவர்களுக்கு உருவப்படமும், சிலைகளும் உருவாக்கப்பட்டன. ஆனால் நபிகள் நாயகத்துக்கு உருவப்படமும் இல்லை. சிலையும் இல்லை.

எந்த செயலால் என்ன விளைவு ஏற்படுகின்றது என்பதன் அடிப்படையில் முடிவு செய்வதுதான் பகுத்தறிவு.

ஆனால் உருவப்படங்கள் திறப்பதை நியாயப்படுத்தி பெரியார் எடுத்துவைக்கும் வாதங்கள் எதுவும் பகுத்தறிவுபூர்வமானதாக இல்லை.

நாம் உருவப்படத் திறப்பு விழா நடத்துவது என்பது பூசை செய்யவோ, தேங்காய், பழம் ஆராதனை செய்து, விழுந்து கும்பிட்டுப் பக்தி செய்து, நமக்கு வேண்டியதைக் கோரிப் பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த - செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாகக் கருதிக்கூட நாம் எந்தப் படத்திறப்பு விழாவும் செய்வதில்லை. மற்றும், எப்படிப்பட்ட படத்திற்கும் பூசை செய்யும்படியோ, கோவில்களிலோ தேர், இரதம், விமானம், சப்பரம் ஆகியவைகளிலோ வைத்து ஊர்வலம் ஆராதனை செய்யும்படி காலித்தனம் செய்வதற்கோ அல்ல.

ஆனால் மற்றெதற்கு என்றால், மனித சமூக நலனுக்கு - சுயநலமில்லாமலும், மற்றவர்களிடமும் எவ்விதக் கூலியோ, புகழோ, பிரயோஜனமோ பெறாமலும், தன் முயற்சியால், தன் பொருளால், தன் பொறுப்பென்று கருதித் தொண்டாற்றி வந்த பெரியார்களின் குணாதிசயங்களையும் தொண்டையும் எடுத்துச் சொல்வதன் மூலம், மற்றும் பலரும் அக்காரியத்தைப் பின்பற்ற வேண்டும் - பின்பற்ற மாட்டார்களா என்பதற்காகவேதான். மனித சமூக நலனுக்குப் பிரதிப் பிரயோஜனம், கூலி இல்லாமல் மக்கள் பாடுபட வேண்டும் என்கின்ற மேலான குணத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சாதனமாகவேதான் இக்காரியத்தைச் செய்கிறோம். (‘குடிஅரசு’ 10-1-1948)

பெரியாரின் வாக்குமூலமும், முரணபாடும்

இப்படி காரணம் கற்பித்த பெரியார் அடுத்த பாராவிலேயே தனது இந்த வாதம் தவறு என்று தன்னையும் அறியாமல் வாக்குமூலம் தருகிறார்.

உதாரணமாக, கிரீஸ் தேசத்துச் சாக்ரடீஸ் என்பவர் - எந்தக் காரியத்தையும் அறிவால் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று சொன்னதற்காக விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார்.

கவுதம் புத்தர் என்பவர் - ஆரியப் புரட்டுகளை எதிர்த்ததற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டார்.

இயேசு கிறித்து விக்கிரக ஆராதனை, கோவில் பூசை முதலியவைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததற்காகச் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார்.

முகமது நபி அனேக மூடப்பழக்க வழக்கங்களையும் பல தெய்வ உணர்ச்சியையும் பெண் கொடுமையையும் எதிர்த்துப் பல நல்ல கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ததற்காகப் பல முறை சங்கடப்படுத்தப்பட்டார்.

அப்படிப்பட்டவர்களும் மற்றும் அது போன்ற பல புதிய அபிப்பிராயம் சொன்னவர்களும் அவர்களது ஆயுள் காலத்தில் இதுபோல் எவ்வளவு துன்பப்படுத்தப்பட்டு, எவ்வளவு கஷ்டப்படுத்தப்பட்டு, எவ்வளவு தொல்லைப்படுத்தப் பட்டு இருந்தாலும் இன்று அவர்கள் கோடானுகோடி மக்களால் அவர்களது அபிப்பிராயங்களோடு மதிக்கப்படுகிறார்கள்; கோடிக்கணக்கான பேர்களால் பின்பற்றப்படுகிறார்கள்.

அது போலவே தான், நாங்களும் இன்று எங்கள் அபிப்பிராயங்கள் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும், பாமர மக்களாலும், சுயநலச் சூழ்ச்சிக்காரர்களாலும் எவ்வளவுதான் வெறுக்கப்பட்டுத் தொல்லைகள் விளைவிக்கப்பட்டு அல்லல்பட்டாலும், பிற்காலத்தில் எங்கள் தொண்டு மக்களுக்கு மிக்க பயன் தரக்கூடியதாயும் பாராட்டக்கூடியதாயும், மக்களை ஞானவழியில் நடத்தக் கூடியதாயும் இருக்கும் என்கின்ற நம்பிக்கையுடையவர்களாகவே இருக்கிறோம். இல்லாவிட்டால் இவ்வளவு தொல்லைகளுடன் எங்களுக்கு எவ்விதத்திலும் சுயநலமற்ற இந்தத் தொண்டைப் பெரும்பான்மையான மக்களுடைய இவ்வளவு வெறுப்பிற்கிடையில் துணிந்து ஆற்ற முனைந்திருக்க மாட்டோம். (‘குடிஅரசு’ 10-1-1948)

பெரியார் இங்கே யாரையெல்லாம் சுட்டிக் காட்டுகிறாரோ அவர்களில் நபிகள் நாயகத்தைத் தவிர மற்றவர்கள் தெய்வங்களாகவும், தெய்வ நிலையில் வைத்து போற்றப்படுவது அனைவரும் அறிந்த உண்மை.

இதுபோல புகழப்பட வேண்டும் என்பதற்காக நாங்களும் உருவப்படம் திறக்கிறோம் என்று கூறுகிறார். அதாவது ஏசு, புத்தர் ஆகியோர் எவ்வாறு மதிக்கப்பட்டார்களோ அவ்வாறு மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே உருவப்படங்கள் என்று தனக்குத்தானே முரண்படுகிறார்.

அறிந்து கொண்டே நியாயப்படுத்துகின்றார்

இதற்கு அடுத்த பாராவில் அவர் கூறுவது இதைவிட வேடிக்கையானது.

பிரச்சாரம் செய்வதற்கு உருவப்படம் பயன்படும் என்று வாதிடும் பெரியார் இதனால் ஒரு பயனும் ஏற்படாது என்கிறார். பெரியார் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை வீரமணியாலும் விளக்க முடியாது.

நாமறிய ஒரு காலத்தில் திலகர் புகழப்பட்டார்; பெசண்ட் அம்மையார் புகழப்பட்டார்; காந்தியும் புகழ்ப்படுகிறார். சரித்திரத்தில் எத்தனையோ ஆச்சாரியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சுவாமிமார்கள் எனப்பட்ட எத்தனையோ பேர் புகழப்பட்டதாகவும் பார்க்கிறோம். இவர்களில் பலர் ‘தெய்வீகம்’ கற்பிக்கப்பட்டார்கள்; பலர் தெய்வங்களாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களெல்லாம் ஒரு காதொடிந்த ஊசியளவு பயன் மக்களுக்கு ஏற்படுகிறதா? ஏற்பட்டதா? ஏற்படும் என்கின்ற குறியாவது காணப்படுகின்றதா? இவர்கள் எல்லாம் புராணங்களுக்குப் புதிய உரை எழுதுகிற உரையாசிரியர்கள் போல் தோன்றி, பாமரர்களுடைய பக்திக்கும் பூசைக்கும் ஆளாகி, முட்டாள் தனத்துடனும் அல்லது பாமர மக்களை ஏமாற்றிப் பொய்ப் புகழ் பெற்று வருகிறோம் என்கின்ற உணர்ச்சியுடனும் தானே செத்தார்கள் - சாகின்றார்கள் - சாகப்போகின்றார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறதே தவிர, கண்கண்ட பயன் என்ன என்று பாருங்கள்! (‘குடிஅரசு’ 10-1-1948)

உருவப்படத்தால் ஏற்பட்ட விளைவுகளை அவர் நன்கு அறிந்து கொண்டேதான் உருவப்படங்களை அவர் நியாயப்படுத்துகிறார்.

அப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் மக்களின் தன்மை உயர வேண்டுமென்று கருதித் தொண்டாற்றியவர்களே ஒழிய, மக்கள் தங்களைப் போற்றிப் புகழ்ந்து பூசிக்க வேண்டுமென்று கருதியவர்கள் அல்லர். ஆதலால் அப்பெரியவர்களை ஞாபகப்படுத்தி - அவர்களின் தன்மையை மற்ற மக்கள் உணர்ந்து, அம்மாதிரியான உள்ளம் பெற்று சமூகத்துக்குத் தொண்டாற்ற முற்படவேண்டும் என்பதற்காகவே அவர்களது உருவப் படத் திறப்பு விழாக்கள் என்ற பெயர் வைத்து இவற்றை எடுத்துக் கொள்கிறோம். (‘குடிஅரசு’ 10-1-1948)

ஆகவே, நாம் நினைவு நாள் கொண்டாடும் மக்களை, உண்மையான மனிதர்களாய்க் கருதி, அவர்களது மனிதத் தன்மையை மதித்து, மற்றவர்களும் அந்தத் தன்மைக்கு வரவேண்டுமென்கிற ஆசைக்காக, எடுத்துக்காட்டுக்காக, பிரச்சாரத்திற்காகக் கொண்டாடுகிறோம். (‘குடிஅரசு’ 14-4-1945)

உருவப்படங்களைத் திறப்பதால் அதைப்பார்த்து அவரது கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று பெரியார் வாதிடுவதிலும் எந்த உண்மையும் இல்லை.

உறுதியான நிலைப்பாடே மாற்றம் தரும்


உறுதியான நிலைப்பாடு, தளர்வில்லாத பிரச்சாரம் ஆகியவற்றால்தான் ஒரு மனிதனிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமே தவிர சிலைகளையும், உருவப்படங்களையும் நிறுவுவதால் அல்ல.

சென்னையில் எத்தனையோ பேரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்த சிலைகள் யாருடையவை என்பது 99 சதவிகித சென்னை வாசிகளுக்குத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அந்த சிலைக்குரியவர்களின் கொள்கை என்ன? கோட்பாடு என்ன என்பது யாருக்கும் தெரியாது! போலி பகுத்தறிவுவாதிகளுக்குக் கூட தெரியாது, தனது மனோ இச்சைப்படி, தான் விரும்பிய ஒன்றை நியாயப்படுத்துவதற்காக பெரியார் இப்படிக் கூறினார். அவரது வாதத்தில் எந்த பகுத்தறிவும் இல்லை என்பதை அறியாமல் பெரியாரைக் கடவுள் நிலையில் வைத்து அவர் கூறுவதை அப்படியே நம்புகின்றனர்.

பெரியாரின் தத்துவம்

எத்தனையோ பேர் சாகிறார்கள். ஏதோ இரண்டொருவர்கட்குத்தான் நாம் நினைவு நாள் கொண்டாடுகிறோம். செத்துப் போனவர்களின் பணத்தை உத்தேசித்தோ, படிப்பை உத்தேசித்தோ, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, சாமர்த்தியம் முதவியவைகளைப் பற்றியோ நாம் எவருக்கும் நினைவு நாள் கொண்டாடுவதில்லை. இவைகள் காரணமாக நாம் எவரையும் போற்றுவதுமில்லை; துதிப்பதுமில்லை.

பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத் தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளோபீடியா’ ரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும். இப்படி அனேகவற்றை - உயிரில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல. (‘குடிஅரசு’ 14-4-1945)

இதைவிட பயங்கரமான தத்துவத்தையும் பெரியார் கூறி இருக்கிறார். பணக்காரர்கள் என்பதற்காக நாங்கள் படம் திறக்கவில்லை என்று கூறியதோடு நிறுத்திக் கொள்ளாமல் சூப்பரான தத்துவம் ஒன்றையும் சொல்லியிருக்கிறார்.

பணக்காரன் என்பதன் பொருளைக்கூட விளங்காமல் ரிஸர்வ் வங்கியை பணக்காரன் என்று கூற வேண்டுமாம்! லைப்ரேரிதான் பெரிய படிப்பாளியாம்! என்சைக்ளோபீடியாதான் பெரிய அறிவாளியாம்! இதிலிருந்து பெரியாரிடம் ஆழமான சிந்தனை எதுவும் இருந்ததில்லை என்பதும், அவரைப் பின்பற்றுவோர் கண்ணை மூடிக்கொண்டுதான் பின்பற்றுகின்றனர் என்பதும் மேலும் தெளிவாகிறது.
இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்...

Blog Archive